திருஞானசம்பந்தர் தேவாரம் |
மூன்றாம் திருமுறை |
3.88 திருவிளமர் - திருவிராகம் பண் - சாதாரி |
மத்தக மணிபெற மலர்வதொர் மதிபுரை நுதல்கரம்
ஒத்தக நகமணி மிளிர்வதொர் அரவினர் ஒளிகிளர்
அத்தக வடிதொழ அருள்பெறு கண்ணொடும் உமையவள்
வித்தகர் உறைவது விரிபொழில் வளநகர் விளமரே.
|
1 |
பட்டில கியமுலை அரிவையர் உலகினில் இடுபலி
ஒட்டில கிணைமர வடியினர் உமையுறு வடிவினர்
சிட்டில கழகிய பொடியினர் விடைமிசை சேர்வதோர்
விட்டில கழகொளி பெயரவர் உறைவது விளமரே.
|
2 |
அங்கதிர் ஒளியினர் அரையிடை மிளிர்வதொர் அரவொடு
செங்கதி ரெனநிற மனையதொர் செழுமணி மார்பினர்
சங்கதிர் பறைகுழல் முழவினொ டிசைதரு சரிதையர்
வெங்கதி ருறுமழு வுடையவ ரிடமெனில் விளமரே.
|
3 |
மாடம தெனவளர் மதிலவை யெரிசெய்வர் விரவுசீர்ப்
பீடென வருமறை யுரைசெய்வர் பெரியபல் சரிதைகள்
பாடலர் ஆடிய சுடலையில் இடமுற நடம்நவில்
வேடம துடையவர் வியன்நக ரதுசொலில் விளமரே.
|
4 |
பண்டலை மழலைசெய் யாழென மொழியுமை பாகமாக்
கொண்டலை குரைகழ லடிதொழு மவர்வினை குறகிலர்
விண்டலை யமரர்கள் துதிசெய அருள்புரி விறலினர்
வெண்டலை பலிகொளும் விமலர்தம் வளநகர் விளமரே.
|
5 |
மனைகள்தொ றிடுபலி யதுகொள்வர் மதிபொதி சடையினர்
கனைகடல் அடுவிடம் அமுதுசெய் கறையணி மிடறினர்
முனைகெட வருமதிள் எரிசெய்த அவர்கழல் பரவுவார்
வினைகெட அருள்புரி தொழிலினர் செழுநகர் விளமரே.
|
6 |
நெறிகமழ் தருமுரை யுணர்வினர் புணர்வுறு மடவரல்
செறிகமழ் தருமுரு வுடையவர் படைபல பயில்பவர்
பொறிகமழ் தருபட அரவினர் விரவிய சடைமிசை
வெறிகமழ் தருமலர் அடைபவர் இடமெனில் விளமரே.
|
7 |
தெண்கடல் புடையணி நெடுமதில் இலங்கையர் தலைவனைப்
பண்பட வரைதனில் அடர்செய்த பைங்கழல் வடிவினர்
திண்கட லடைபுனல் திகழ்சடை புகுவதொர் சேர்வினார்
விண்கடல் விடமலி யடிகள்தம் வளநகர் விளமரே.
|
8 |
தொண்டசை யுறவரு துயருறு காலனை மாள்வுற
அண்டல்செய் திருவரை வெருவுற ஆரழ லாயினார்
கொண்டல்செய் தருதிரு மிடறின ரிடமெனில் அளியினம்
விண்டிசை யுறுமலர் நறுமது விரிபொழில் விளமரே.
|
9 |
ஒள்ளியர் தொழுதெழ வுலகினில் உரைசெயு மொழிபல
கொள்ளிய களவினர் குண்டிசை யவர்தம் அறிகிலார்
பள்ளியை மெய்யெனக் கருதன்மின் பரிவொடு பேணுவீர்
வெள்ளிய பிறையணி சடையினர் வளநகர் விளமரே.
|
10 |
வெந்தவெண் பொடியணி யடிகளை விளமருள் விகிர்தரைச்
சிந்தையுள் இடைபெற வுரைசெய்த தமிழிவை செழுவிய
அந்தணர் புகலியுள் அழகமர் அருமறை ஞானசம்
பந்தன மொழியிவை உரைசெயு மவர்வினை பறையுமே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |